Take a fresh look at your lifestyle.

‘ தர்மன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியானது குறித்து மனம் திறந்த சிம்ரன்:

8

‘ தர்மன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியானது குறித்து மனம் திறந்த சிம்ரன்:

சினிமாவில் சில கலைஞர்கள் மட்டும்தான் காலத்தை தாண்டியும் ஜொலிப்பார்கள். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் நடிகை சிம்ரன். அழகும், அசாதாரண நடிப்புத் திறனும் இயல்பாக ஒன்றிணைந்த அவர்,
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். ஹீரோயினாக பல வெற்றிகளை பார்த்து இருந்தாலும் கூட, காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்து சவாலான மற்றும் வித்தியாசமா ன கேரக்டர்களை இன்றும் தேர்ந்தெடுத்து நடித்து வருவது தான் அவரின் வெற்றி என்ற ரகசியம். 1997, ஜூலை 4 அன்று வெளியான ‘ஒன்ஸ் மோர்’ மற்றும் ‘வி.ஐ.பி.’ ஆகிய படங்களின் மூலம் தனது தமிழ்த் திரையுலகில் அறிமுகமான சிம்ரன், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும் முன்னணி நாயகியாக தன்னை திரையுலகில் நிலைநிறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு டூரிஸ்ட் பேமிலி படத்தில் குடும்ப தலைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்ற சிம்ரன் தற்போது மற்று மொரு முக்கியமான மைல்கல்லாக, ரஜினி நடிக்கும் ‘தர்மன்’ படத்தில் வலுவான கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.இது குறித்து நடிகை சிம்ரன் நம்மிடம் பகிர்ந்துகொண்டது, “சில கனவுகள் நனவாக சரியான நேரம் அமைய வேண்டும். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அது ‘பேட்ட’ திரைப்படத்தில் நிறைவேறியது. என்னுடையது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஆனால், இன்று ‘தர்மன்’ படத்தில் முக்கியத்துவமும் நிறைந்த ஒரு கேரக்டரில் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். என் திரைப்பயணம் முழுவதும் எனக்கு மாறாத அன்பையும் ஆதரவையும் வழங்கி வரும் என் ரசிகர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது ஊக்கம்தான் ஒவ்வொரு புதிய அத்தியாயத்தையும் உற்சாகத்துடன் தொடங்க எனக்கு உதவுகிறது. ‘கேளுங்கள்… நம்புங்கள்… இந்த பிரபஞ்சம் நீங்கள் நினைக்காத விதத்தில் பதிலளிக்கும்’ என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த மனதுடன் இந்த அழகான புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன்” என்றார்.

பாக்ஸ்
தலைமுறைகள் கடந்த நடிகை
தனது வசீகரத்தாலும் நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தது முதல் பல பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்தது வரை காலத்திற்கேற்றாற்போல தன்னை புதுப்பித்துக்கொள்ள என்றுமே நடிகை சிம்ரன் தயங்கியதில்லை. தலைமுறைகள் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் அவர் நிலைத்து நிற்க இதுவே காரணம்.