அரசு வீடு..
“நான் காலி செய்திடுவேன்”
தலைமை நீதிபதி சூசக பேச்சு
ஓய்வு பெறும் நேரத்தில், அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள், தனக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி விடுவேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி B.R.கவாய் தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட், அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தை கடந்த பிறகும், தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை காலி செய்யவில்லை என உச்சநீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அப்போது, உடல் நலம் குன்றிய தனது மகள்களுக்கு ஏற்ற வகையிலான வீட்டை ஏற்பாடு செய்வது கடினமாக இருந்ததால், அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதை நீட்டித்ததாக சந்திரசூட் கூறியிருந்தார். இந்நிலையில் டில்லியில் நீதிபதி சுதான்ஷு Dதுலியாவுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடந்தது. அதில், தலைமை நீதிபதி B.R.கவாய் பேசுகையில், “நீதிபதி துலியாவை உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது தான் எனக்குத் தெரியும். அவருக்கு எனக்கும் அதற்கும் முன் தொடர்பு கிடையாது. நீதித்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். ஓய்வு பெற்றவுடன் உடனடியாக தனது அரசு இல்லத்தை காலி செய்யும் நீதிபதிகளில் ஒருவராக அவர் இருப்பார். உண்மையில் அது ஒரு அரிதான விஷயம். நானும் அதைச் செய்யக்கூடிய நிலையில் இருப்பேன். ஏனென்றால், நவம்பர் 24 ஆம் தேதி வரை எனக்கு மாற்று வீட்டைக் கண்டுபிடிக்க நேரம் கிடைக்காது. ஆனால், விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட நேரம் எதுவோ, அதற்கு முன்பு நான் காலி செய்துவிடுவேன்” என்று B.R.கவாய் பேசினார்.