வேலுமணி தங்கமணிக்கு எடப்பாடி தூது.. அதிமுக புதிய அறிவிப்பில் டிவிஸ்ட்
சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. திமுக ஆதரவில் ஆட்சியமைக்க எடப்பாடி முயற்சித்ததாக கூறி, வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். இதனால் அவர்களுக்குள் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் வேலுமணியை சமாதானப்படுத்துவதற்காக அவருக்கு முக்கியத்துவம் வழங்கும் ஒரு அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள். பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை அதிமுக எஸ்.பி. வேலுமணி கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அவரை மாற்றிவிட்டு முன்னாள் அமைச்சர் செ.ம வேலுசாமியை மாவட்ட செயலாளராக்கினார் எடப்பாடி. கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் வேலுமணி புறக்கணிக்கப்பட்டார். அவர்களின் பழைய பதவிகளை பறித்து, டம்மியான பதவி வழங்கப்பட்டது.
எடப்பாடி வேலுமணி பஞ்சாயத்து சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கூட வேலுமணி, தங்கமணி கலந்து கொள்ளவில்லை. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் போல வேலுமணியும் தவெகவில் இணையவுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அவர் அதிமுகவில் தான் இருக்கிறார். கட்சி கொடி, எடப்பாடியின் புகைப்படம் இல்லாமல் அவர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுப்பதை வேலுமணி திட்டமாக வைத்துள்ளார்.
சமூகவலைதளங்களில் எடப்பாடி, வேலுமணி ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. வேலுமணியின் ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்து, அந்த இடங்களில் தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறி வரும் நிலையில், மறுபக்கம் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து கொண்டே எடப்பாடிக்கு பாடம் கற்பிக்க முயற்சித்து வருகிறார்கள்.
தீரன் சின்னமலை நிகழ்ச்சியில் முக்கியத்துவம் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நனைவு நாளை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். எடப்பாடி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் , துணைப்பொதுச் செயலாளர் வேலுமணி மரியாதை செலுத்துவார் என கூறப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் கருப்பணன், செல்வராஜ், தாமோதரன் உள்ளிட்டோர் கொண்ட பெரிய பட்டியலில் வேலுமணியின் பெயர் முதல் இடத்தில் உள்ளது. இதே போல சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு சின்ன பகுதியில் அமைப்பு செயலாளர் தங்கமணி மரியாதை செலுத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சரோஜா, தன்னுடைய தீவிர ஆதரவாளர் இளங்கோவன் ஆகியோர் பெயர் கொண்ட பட்டியலில் தங்கமணியின் பெயர் முதலாவதாக இடம் பெற்றுள்ளது.
எடப்பாடி தூது இதன் மூலம் வேலுமணி மற்றும் தங்கமணியை சமாதானப்படுத்த எடப்பாடி முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், “கட்சியினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதை கடந்து செல்ல வேண்டிய கடமை எடப்பாடிக்கு உள்ளது. இதனால் கட்சியில் இருப்போரை அரவணைத்து செல்வதற்கான அறிகுறியாக இது உள்ளது. ஆனால் இதை வேலுமணி, தங்கமணி ஏற்பார்களா என்பது தெரியவில்லை” என்றனர்.