Take a fresh look at your lifestyle.

விசிகவுக்கு 8 தொகுதிகள்.. திருமாவளவனுடன் சீக்ரெட் பேச்சுவார்த்தையில் திமுக சீனியர்கள்! என்ன நடந்தது?

45

விசிகவுக்கு 8 தொகுதிகள்.. திருமாவளவனுடன் சீக்ரெட் பேச்சுவார்த்தையில் திமுக சீனியர்கள்! என்ன நடந்தது?

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறி இருக்கின்றனர். இதற்கு விசிக தலைமை ஒப்புக்கொண்டாலும், விசிகவின் 2ஆம் கட்ட நிர்வாகிகள் அரை மனதுடன் ஒப்புதல் கொடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இருந்தாலும் கூடுதலாக சில தொகுதிகளை கைப்பற்ற திருமாவளவனுக்கு அக்கட்சியினர் அழுத்தம் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர்.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தலைமையிலான கூட்டணி இணக்கமாகவே இருந்து வருகிறது. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தாலும், அது கூடுதல் தொகுதிகளை பெறுவதற்காக என்றே பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்துள்ளன.

அதற்கேற்ப களத்திலும் அந்தந்த கட்சிகள் வலுவடைந்து வருகிறது. இதனிடையே திமுக சீனியர்கள் கூட்டணி கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவனுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.

அண்மையில் கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு விழாவில் சுமார் 15 நிமிடங்கள் வரை திருமாவளவனுடன் பேசப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்று திமுக தலைமை பேசி இருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, 4 தொகுதிகளில் வென்றது.

இந்த முறை வட மாவட்டங்கள், செங்கல்பட்டு, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசிக நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனை கணக்கிட்டே 8 தொகுதிகள் என்று திமுக பேசி இருக்கிறது. இதற்கு விசிகவின் 2ஆம் கட்ட தலைவர்கள் பலரும் அரைமனதுடன் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இருந்தாலும் கூடுதலாக சில தொகுதிகளை கைப்பற்ற திருமாவளவனுக்கு அக்கட்சியினர் அழுத்தம் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர்.

ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டால் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க முடியும். அது வேறு சில நிர்வாகிகளுக்கு அதிருப்தியை அளிக்கலாம். இதனால் திருமாவளவன் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் விசிகவினர் பேச தொடங்கி இருக்கின்றனர். இதனால் பிப்ரவரி 22ஆம் தேதிக்கு பின் இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.