Take a fresh look at your lifestyle.

தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக்

2

தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக்

தங்க மார்கெட்டில் கடந்த சில வாரங்களில் மிகப் பெரிய மாற்றம் நடந்துவிட்டது. இதனால் தங்கத்தை வாங்குவது தொடர்பாக ஒருவிதக் குழப்பத்திலேயே பொதுமக்கள் இருக்கிறார்கள்.இதற்கிடையே தங்க மார்கெட்டில் என்ன நடந்துள்ளது என்பதை விளக்கியுள்ள பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், இதன் விலை வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பது தொடர்பாகவும் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதற்குச் சர்வதேச மோதல் தொடங்கி பொருளாதாரச் சூழல் வரை பல விஷயங்கள் காரணமாக இருந்தது. தங்கம் விலை உயர்ந்தாலும் கூட மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தவே இல்லை. இதனால் விலை ஒரு பக்கம் ஏற ஏற விற்பனையும் தொடர்ந்து அதிகரித்தே வந்தது.

தங்கம்

அதேநேரம் மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய பிறகு சர்வதேச பொருளாதாரம் இக்கட்டான சூழலுக்கு வந்தது. விலை உயர்வால் கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருந்ததால்.. பொதுமக்கள் தங்கம் வாங்குவதைத் தள்ளிப் போட வேண்டும் எனப் பிரதமர் மோடி வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தார். மேலும், தங்கம் மீதான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டது. இதன் பிறகு தங்க மார்கெட் மொத்தமாகவே மாறியது.

ஆனந்த் சீனிவாசன்

இதற்கிடையே தற்போதுள்ள பொருளாதாரச் சூழல் தொடர்பாகவும் தங்கம் விலை தொடர்பாகவும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், “இப்போது ட்ரம்ப் என்ன சொல்கிறார் என்றால்.. அமெரிக்காவில் 1950களுக்கு அப்புறம் தங்கம் எவ்வளவு இருக்கிறது என்பதை யாரும் கணக்கு எடுக்கவில்லை. அதைக் கணக்கெடுக்கச் சொல்கிறார். இப்படிக் கணக்கு எடுத்து அந்தத் தங்கத்தில் ஒரு பகுதியை விற்று, அமெரிக்காவின் கடனை டிரம்ப் அடைக்கலாம் எனச் சிலர் சொல்கிறார்கள்.

இன்னும் சிலர் இந்தியாவிலும் தங்கத்திற்குச் சிக்கல் வரும் என்கிறார். குறிப்பாகத் தங்க இறக்குமதிக்கே தடை விதிக்கப்படலாம் என்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும்போது தங்கம் விலை ஏறுமா இறங்குமா என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரைக்கும் தங்கம் விலை இறங்காது. ஏனென்றால், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அனைத்தும் டாலரை கழட்டி விட்டுவிட்டு, தங்கத்தை வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.

நிலைமை இதுதான்

டாலரை தாண்டி அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்க ஆரம்பித்துவிட்டனர். அனைத்து நாடுகளின் வங்கிகளையும் எடுத்தால் டாலர் கையிருப்பு குறைந்து தங்கக் கையிருப்பு அதிகரித்துவிட்டது. அதாவது வர்த்தகம் செய்ய மட்டும் டாலரை வைத்துக் கொண்டு, பாதுகாப்பிற்குப் பல நாடுகள் தங்கத்தை வைத்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளனர்” என்றார்.

70% சரிவு

அதேபோல மற்றொரு வீடியோவில், “தங்கத்தின் தேவையில் 70% வரை சரிந்து இருக்கிறது. இறக்குமதி வரி உயர்வு காரணமாகவே தங்கத்தின் தேவை இந்தளவுக்குச் சரிந்துள்ளதாகச் சிலர் மகிழ்ச்சி அடைகிறார்கள். உண்மை அது கிடையாது. இப்போது வேலை இல்லாத பலரும் குருவி போலத் தங்கத்தைக் கடத்தி வருகிறார்கள். மத்தியக் கிழக்கு நாடுகள், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாகத் தங்கம் வருவதாகச் சொல்கிறார்கள்.ஏற்கனவே பிரதமர் தங்கம் குறித்துப் பேசிய பிறகு விலை தட்டென உயர்ந்துவிட்டது. இதனால் சிறிய அளவில் நகைக்கடை வைத்திருப்போர் பெரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்” என்றார்.