கருப்பு பட வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் வராது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் கற்பனைக் கிராமமான ‘மால்குடி’ என்பதைப் போல, இத்திரைப்படமும் முற்றிலும் கற்பனையான ‘செவன் வெல்ஸ்’ (Seven Wells) என்ற நீதிமன்றத்தின் நீதிபதியை மட்டுமே ஊழல்வாதியாகச் சித்தரித்துக் காட்டியுள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இந்தத் தீர்ப்பில் எழுதியுள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “நாம் இப்போது சமூக ஊடகங்களின் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; இங்கு யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு எளிதாகத் தப்பித்துவிட முடிகிறது, எனவே முந்தைய நூற்றாண்டுகளில் நீதிமன்ற அவமதிப்புக்காக உருவாக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் தரநிலைகள் இப்போது தகுந்தவையாக இருக்காது; நீதிமன்றங்கள் குறித்து ஒரு கொடூரமான அல்லது மோசமான கருத்து முன்வைக்கப்பட்டால் கூட, அதை அப்படியே புறக்கணித்துவிட்டு நகர்வதே நல்லது, நீதித்துறை என்ற காரவன் (Caravan) தனது பயணத்தைத் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று கொண்டே இருக்க வேண்டும்” என்று மிகவும் எதார்த்தமாகத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.