“என் இனிய தமிழ் மக்களே”:பாரதிராஜா மறைவால் மௌனமான குரல்
“என் இனிய தமிழ் மக்களே”!! என்ற அன்பும் நெருக்கமும் கலந்த அந்த அறிமுக வாசகம், ஒருகாலத்தில் எண்ணற்ற திரைப் பயணங்களின் தொடக்கமாக ஒலித்தது. இன்று அந்த பரிச்சயமான குரல் நினைவுகளுக்குள் கரைந்து போனது. தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கிய இயக்குநர் பாரதிராஜாவின் வாழ்க்கை தனது இறுதி காட்சியை எட்டியுள்ளது. அவரின் மறைவு தமிழ் திரையுலகில் ஆழமான வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. தமிழ் சினிமாவின் புரட்சிகர கதை சொல்லிகளுள் ஒருவரான இயக்குநர் பாரதிராஜா, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு ஒரு மனிதனின் முடிவாக மட்டும் அல்ல; இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தின் முடிவாகவும் பார்க்கப்படுகிறது.
ஆறு முறை தேசிய விருதுகளை வென்ற பாரதிராஜா, தமிழ் சினிமாவின் மொழியையே மாற்றியமைத்தவர். ஸ்டுடியோ அமைப்புகளுக்குள் சிக்கியிருந்த காலத்தில், தனது முதல் படமான 16 வயதினிலே (1977) மூலம் அவர் அந்தஎல்லைகளை உடைத்தார். கிராமப்புற நிலப்பரப்பு, இயல்பான உணர்வுகள், உண்மையான மனிதர்கள் என புதிய சினிமா மொழியை அவர் அறிமுகப்படுத்தினார். அந்த படம் அவரது வாழ்க்கையையும் தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் மாற்றிய முக்கிய தருணமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து வந்த படங்கள் அனைத்தும் கலைநயமும் சமூகப் பார்வையும் கலந்தவை. காதலின் மென்மையை கிழக்கே போகும் ரயில் வெளிப்படுத்தியது, மனத்தின் இருண்ட பக்கங்களை சிகப்பு ரோஜாக்கள் ஆராய்ந்தது, இளமை உணர்வுகளை அலைகள் ஓய்வதில்லை பேசின. வேதம் புதிது மற்றும் கருத்தம்மா போன்ற படங்கள் சமூக அநீதிகளையும் சாதி அடக்குமுறைகளையும் துணிச்சலாக வெளிப்படுத்தின. ஒவ்வொரு படமும் அவரது தனித்துவமான கையெழுத்தை கொண்டிருந்தது. மேலும் உண்மை, துணிவு, மற்றும் மண்ணோடு இணைந்த கதை சொல்லல். “இயக்குநர் இமயம்” என அழைக்கப்பட்ட பாரதிராஜா, வெறும் படைப்பாளி அல்ல; தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய ஒரு இயக்கமாக இருந்தார். நகர மையக் கதைகளிலிருந்து கிராம வாழ்க்கை நோக்கி சினிமாவை அவர் நகர்த்தினார். இதன் மூலம் சாதாரண மக்களின் வாழ்க்கை திரையில் பிரதிபலிக்கத் தொடங்கியது. பல நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அவரது வழிகாட்டுதலால் வளர்ச்சி பெற்றனர். பின்னாள்களில் நடிகராகவும் அவர் தனித்த அடையாளம் பெற்றார். குறைந்த வார்த்தைகளில் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது நடிப்பு, அனுபவம் நிறைந்த கலைஞனின் பிரதிபலிப்பாக இருந்தது. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில், மகன் மனோஜ் இழப்பு அவரை ஆழமாக பாதித்தது. அந்த துயரம் அவரது இறுதி ஆண்டுகளில் நிழலாக தொடர்ந்தது. இயக்குனர் பாரதிராஜாவின் மறைவுச் செய்தி பரவியதும் அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். தமிழ்ச் சினிமாவுக்கு தனித்த அடையாளம் அளித்தவர் என அனைவரும் நினைவு கூர்ந்தனர். அவரது படைப்புகள் சமூகத்தின் கண்ணாடியாகவும், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும் இருந்தன. பாரதிராஜா வெறும் படங்களை உருவாக்கவில்லை; வாழ்க்கையின் வாசனையை திரையில் பதித்தார். அவரது காட்சிகளில் மண்ணின் மணம் இருந்தது; அவரது கதாபாத்திரங்களில் உண்மை இருந்தது; அவரது கதைகளில் மனிதநேயம் இருந்தது. திரை முடிந்த பின்னரும் அவை மனதில் நீடித்தன.இன்று அவர் இல்லையென்றாலும், அவரது தாக்கம் தொடர்கிறது. உண்மையை பேசும் ஒவ்வொரு திரைப்படத்திலும், மண்ணைச் சார்ந்த ஒவ்வொரு கதையிலும், அவரது ஆன்மா உயிருடன் உள்ளது. அவரது பயணம் முடிந்தாலும், அவரது சினிமா மரபு என்றென்றும் தொடரும்.