சீனாவின் கொசு வடிவ ட்ரோன்கள் – இந்தியாவுக்கு ஆபத்து!
எளிதில் நுழைய முடியாத குறுகலான பகுதிக்குள் பறந்து சென்று உளவு பார்க்கக்கூடிய வகையில் கொசு வடிவிலான மிகச்சிறய ட்ரோனை சீனா கண்டுபிடித்துள்ளது.
ஆபத்தான பகுதிகளுக்கு சென்று சத்தமில்லாமல் உளவு பார்க்கும் வகையில் இந்த ட்ரோன் தயாரிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ராணுவ ஆய்வு நிறுவனமான National University of Defense Technology (NUDT) இதைக் கண்டுபிடித்துள்ளது.
கொசு வடிவிலான இந்த ட்ரோனின் வீடியோவை கடந்த வார இறுதியில் சீனா வெளியிட்டுள்ளது.
கொசுவைப் போல் மெல்லிய கருப்பு உடல் பகுதி, மஞ்சள் நிறத்தில் 2 சிறகுகள், முடியைப் போல் மெல்லிய 3 கால்கள் ஆகியவற்றைக் கொண்டதாக இந்த புதிய ட்ரோன் உள்ளது.
சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ட்ரோன்களை ஸ்மார்ட் போன்களை வைத்து கட்டுப்படுத்த முடியும் என்று சீன ஆராய்ச்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சுழலை கண்காணிக்கவும், செயற்கையான மகரந்த சேர்க்கைக்காகவும், நிலச்சரிவு போன்ற ஆபத்து சமயங்களில் பயன்படுத்துவதற்காகவும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்று சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஆனால், ராணுவத்துக்காகவும், இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் மற்ற நாடுகளிடையே எழுந்துள்ளது..
முன்னதாக இதேபோன்று ஈக்கள் வடிவிலான ட்ரோன்களை ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் Harvard Micro robotics ஆய்வு மையம் தயாரித்து இருந்தது.
இப்போது சீனாவின் இந்த கொசு வடிவ ட்ரோன் அதைவிட சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த கண்டுபிடிப்பை அறிவியல் அறிஞர்கள் பலரும் எதிர்த்துள்ளர்.
திமோத்தி ஹீத் என்ற பாதுகாப்பு ஆய்வாளர் இதுபற்றி கூறும்போது, “எதிர்காலத்தில் இதுபோன்ற ட்ரோன்களைப் பயன்படுத்தி கிரிமினல்கள் தனிப்பட்ட விவரங்களையும் பாஸ்வேர்டுகளையும் சேகரிக்க வாய்ப்பு உண்டு” என்றார்.
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய அறிவியல் ஆய்வாளரான ட்ராசி கூறும்போது, “இந்த ட்ரோன்களில் மிகச்சிறிய பொருட்களை யாருக்கும் தெரியாமல் எடுத்துச்செல்ல முடியும். அதனால் இதன்மூலம் கொரோனா போன்ற கொடிய வைரஸ்களையும் பரப்ப வாய்ப்புள்ளது.
இன்னும் சில ஆண்டுகளின் மனிதர்களின் உதவி இல்லாமல் தானாகவே இயங்கும் ஆற்றலை இந்த ட்ரோன்கள் பெற்றுவிட வாய்ப்புகள் உள்ளன. அது இன்னும் ஆபத்தானது” என்கிறார்.
இந்த ட்ரோன்கள் காட்சிகளுடன் குரலையும் பதிவு செய்ய முடியும் என்பதால் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான பாஸ்வேர்ட் போன்ற விஷயங்களைத் திருட இது பயன்படுத்தப்படலாம் என்றும் அறிவியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் தனிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கையை உளவு பார்க்கவும் இது பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சீனாவின் முக்கிய எதிரி நாடாக இந்தியா கருதப்படுவதால், கொசு வடிவிலான இந்த ட்ரோன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டி உள்ளது.
இந்த ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை சீனா திருடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் ஆபத்தான கிருமிகளை இந்தியாவில் ஊடுருவச் செய்வதற்கும் சீனா இதைப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
இந்த விஷயத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா இப்போதே எடுப்பது நல்லது.